பயணம்
மிஸ்டர் சிவா சென்னை வந்து மூன்று வருடங்களானாலும் எக்மோர் ஸ்டேசனை மிதிப்பது இது தான் இரண்டாவது முறை.எக்மோர் என்றில்லை ரயிலில் பயணிப்பதும் இரண்டாவது முறை தான்.ரயில் நிலையத்தின் விதிகளும்,நடைமுறைகளும் அவருக்குப் பிடிபடாததால் பெரும் சிரமத்திற்குப் பிறகே தனது இருக்கையைச் சென்றடைந்தார். சூட்கேஸை இருக்கையில் வைத்துவிட்டு பதற்றத்துடன் சற்று தூரமாக அமர்ந்திருந்தவரிடம் அது வைகை எக்ஸ்பிரஸ் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
சிவா கிண்டி இஞ்சினியரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் மூன்றாமாண்டு மாணவர்.நியூட்டனின் விதிகளை அறிந்த அளவுக்கு உலக விஷயங்களில் அவ்வளவு ஞானம் கிடையாது.விதிகளும் விதிகள் என்ற அளவில் மட்டுமே அவருக்குத் தெரியும்.விடுமுறையைக் கழிக்க சொந்த ஊரான தெத்துப்பட்டிக்கு சென்று கொண்டிருக்கிறார்.
ஊரின் முதல் இஞ்சினியர் என்ற பெருமிதம் அவருக்கும் அவரது பெற்றோருக்கும்.மகனுக்கு இஞ்சினியரிங் சீட் கிடைத்த செய்தி அறிந்ததும் சிவாவின் தாய் ஈன்ற பொழுதின் பெரிதுவந்தார்.இரண்டு டாக்டர்களையும்,ஒரு கலெக்டரையும்,சில ஆசிரியர்களையும்,பலவிதமான அம்மா அப்பாக்களையும்,அண்ணன் தம்பிகளையும் உருவாக்கிய பிரதேசம் முதன்முறையாக ஒரு இஞ்சினியரையும் உருவாக்கியது.
மிஸ்டர் சிவாவின் தந்தை ராமசாமி மூப்பனார் ஊரின் முக்கிய புள்ளிகளில் ஒருவர்.என்றாலும் கொள்ளாயிரம் என்றோ கொல்லாயிரம் என்றோ அழைக்கப்பட்டார்.’ஆயிரம் இருந்தாலும்’ என்ற வார்த்தைகள் அவரது உரையாடலின் ஓர் அங்கமாக இருந்த காரணத்தால் ஏற்பட்ட குணப்பெயரோ அல்லது பண்புசார் பெயரோ!அவ்வாறு விளிக்கப்பட்டாலும் மரியாதை கலந்த தொனியிலேயே அழைக்கப்பட்டார்.
அவரது உடலுக்கும் பொருளுக்கும் விவசாயம். ஆவிக்காக ஆன்மாவிற்காக உபதொழிலாய் ஜோசியம்.தொழில் என்று கூடச் சொல்ல முடியாது.தொழில் என்றால் லாபமோ,நஷ்டமோ இருக்கவேண்டும் என்பது நியதியல்லவா? ஜோசியம் பார்க்க வருபவர்களிடம் சன்மானமோ,வெகுமதியோ பெறமாட்டார்.தெத்துப்பட்டி சமூகத்திடமிருந்து கிடைக்கின்ற மரியாதை மட்டுமே அவருக்குப் போதுமானதாக இருந்தது.
வெள்ளிக்கிழமை அவருக்கும் ஊர் மக்களுக்கும் விசேஷமான நாள்.கொள்ளாயிரத்தார் ஜோசியம் பார்க்கும் நாள் என்பதால் ஏற்பட்ட முக்கியத்துவம்.வெள்ளியானால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து வெள்ளாடை அணிந்து நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டு பூஜைகளை முடித்து பரவசமான நிலையில் மணையில் அமரும்போது தெய்வீகமாகக் காட்சியளிப்பார்.மணையில் அமர்ந்துவிட்டால் ‘ஆயிரம் இருந்தாலும்’ போன்ற அற்பமான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து உதிர்வதில்லை.குறைந்த பட்சம் இரண்டு மணிநேரம் மணை வாசம்.இயல்பான ராமசாமி மூப்பனாரை தரிசிக்க வேண்டுமாயின் மணையிலிருந்து இறங்கிய பிறகே வாய்க்கும்.
கொள்ளாயிரத்தாருக்கு முதலில் பிறந்த இரண்டும் பெண் பிள்ளைகள்.கடைசியாக ஆண் வாரிசாக மிஸ்டர் சிவா.சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை.சூட்கேஸை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு அமர்ந்தார்.
ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்தன.இருந்தபோதிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிலரே அந்தப் பெட்டியில் இருந்தார்கள்.இந்தக்காலத்தைப் போல் அந்த நாள்களில் ரயிலில் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கவில்லை.மிஸ்டர் சிவாவுக்கு எதிர்ப்பக்க ஜன்னலோர இருக்கையில் முப்பது வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணும் அவருக்கு வலப்புறத்தில் சற்று தள்ளி ஒரு வயதானவரும் இருந்தனர்.
ரயில் நகர ஆரம்பித்தது.பெண்ணை வழியனுப்ப அவரின் அம்மா,அப்பா,அண்ணன் மூவரும் வந்திருந்தார்கள்.பெண்ணும்,அம்மாவும் விழிகளில் நீர் திரள விடை பெற்றுக்கொண்டார்கள்.இந்த சம்பவங்கள் எதுவும் சிவாவின் கண்களில் படவில்லை.பயண அலுப்பைக் குறைப்பதற்காக ரயில் நிலையத்தில வாங்கிய பாக்கெட் நாவலை வாசிக்கத் துவங்கியிருந்தார்.பக்கத்து அறை நண்பனின் சகவாசத்தால் கிடைத்த ஞானமிது.
எழுத்தின் வெளியில் மிதக்கலானார்.
வினோத் டம்பப்பையை ஜிப்ஸியின் பின்புறத்தில் எறிந்து,ரேபானை கண்களில் அணிந்து,எஞ்சினுக்கு உயிரூட்டும் போது எதிரில் அமர்ந்திருந்த பெண் புக்ஸ் நிறையா படிப்பீங்களா? என்றாள்.
இல்லங்க டிராவல் பண்ணும்போது எப்பவாவது படிப்பேன்.ஜன்னலோரப் பெண்ணைப் பார்த்தும் பாராமல் பதிலளித்துவிட்டு புத்தகத்தில் கண்களை நிறுத்தினார்.
பெண்ணின் முகத்தில் பேசுவதற்கான ஆர்வம் இருந்தது.ஐந்தரை அடி உயரம்.காட்டன் சாரி அணிந்திருந்தாள்.உற்சாகமான முகபாவம்.உதறித்தள்ள இயலாத அழகு.வேகமாய் நகர்கின்ற வெளியில் எவ்வித சலனமுமின்றி அவளது விழிகள்.
சிவாவின் பக்கமாய் விழிகளைத் திருப்பி என்ன பண்றீங்க?காலேஜ் படிக்கிறீங்களா? என்றாள்.
கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்ல பி.இ தேர்ட் இயர்ங்க.மிஸ்டர் சிவாவுக்கு தயக்கம் விலகவில்லை.
அளவாத்தான் பேசுவீங்களா? இல்ல பொண்ணுங்கட்ட பேசுறதல கூச்சமா?
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லங்க.லேசாக சிரித்துக் கொண்டே புத்தகத்தை மூடினார்.
லீவுக்கு ஊருக்கு போறீங்களா? எந்த ஊரு?
ஆமாங்க.திண்டுக்கல்.நீங்க?
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சைதாப்பேட்ல தாங்க.எங்கப்பாவுக்கு டெலிபோன் எக்சேஞ்ச்ல வேல.எங்க வீட்ல என்னையும் சேர்த்து மொத்தம் ஏழு பேர்.நாந்தான் கடைக்குட்டி.எட்டு மாசத்துக்கு முன்னால தான் எனக்குக் கல்யாணம் ஆச்சுங்க.அவர் சென்ட் ஜோசப் கலேஜ்ல லெக்சரா இருக்கார்.உங்க வீட்ல?
எங்களோடது விவசாயக்குடும்பம்.நாங்க மொத்தம் அஞ்சு பேருங்க.நானும் வீட்டுக்கு கடசி தான்.எங்கப்பாவுக்கு ஊர்ல நல்ல மரியாதைங்க.பஞ்சாயத்து பிரசிடென்ட்டா இருக்கார்.பெருமிதத்துடன் சொன்னார்.
அப்பா கிளர்க்ங்கறதுனால வருமானம் குறைச்சலா இருந்தாலும் எங்க வீடு கூத்தும் கும்மாளமுமா இருக்கும்.அதுவுமில்லாம வீட்டுக்கு ஒரே பொண்ணுங்கறதால ரொம்பச் செல்லம்.
பெண் தேநீர் வாங்கித்தர இருவரும் அருந்தினர்.
என்னோட புகுந்த வீட்டுக்கும்,பொறந்த வீட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லங்க.மாமியார் விருப்பப்படி தான் வீட்ல எல்லாமே நடக்கும்.அவங்க வச்சது தான் சட்டம்.சிரிச்சுப் பேசுறதோ சத்தமாப் பேசுறதோ அவங்களுக்கு சுத்தமாப் பிடிக்காது.வீட்டுக்கு யார் வந்தாலும் நான் ஹால்ல இருக்கக்கடாது.உள் ரூமுக்கு போயிரணும்.மொதல்ல ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க.இப்ப ஓரளவுக்குப் பழகிடுச்சு.
ரயில் விரைந்து கொண்டிருந்தது.
கொள்ளாயிரத்தாருக்கு அவரது பத்தொன்பது வயதில் திருமணம்.பக்கத்து ஊர் பெரிய மனிதரான பெரியசாமி மூப்பனாரின் சௌந்தர்ய புத்திரி லஷ்மி அம்மாளை மணந்து கொண்டார்.லஷ்மி அம்மாள் பெயருக்கேற்றார் போல் லஷ்மிகரமாகவும் மங்களகரமாகவும் இருந்தார்.இருந்தென்ன? சீர்,செல்வம்,தாம்பத்ய இன்பத்தைக் கொடுத்தால் ஆயிற்றா?
மழலைச் செல்வம் எட்டாக்கனியாக இருந்தது. கொள்ளாயிரத்தாரால் அவரது ஆண்மையை அவரின் சமூகத்தாரிடம் பறைசாற்ற முடியவில்லை.ஆண்மையை நிலைநாட்ட லஷ்மி அம்மாளுக்கு அடியும் உதையும்,ஏச்சும் பேச்சும் உபரியாக மலடிப் பட்டமும்.
எட்டு வருடப் போராட்டத்திற்குப் பிறகு லஷ்மி அம்மாள் கருத்தரித்தார்.பிரசவத்தின் போது ஏற்பட்ட ஏதோவொரு கோளாறு.உலகத்தைப் பார்க்காமலே சேயும்,லோக கஷ்டங்களிலிருந்து விடுதலை பெற்றுத் தாயும் பரலோகம்.
அடுத்த வருடம் கொள்ளாயிரத்தாருக்கு மறுமணம்.பத்தே மாதத்தில் குழந்தை.கொள்ளாயிரத்தாருக்கும் அவர் மேல் அவருக்கே இருந்த சந்தேகம் விலகியது.அடுத்தடுத்து மேலும் இரண்டு குழந்தைகள்.பொருட்செல்வமும் பெருகியது.
ரயில் திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது.
திருச்சில உங்க வீட எங்க இருக்கு? மிஸ்டர் சிவா கேட்டார்.
தில்லை நகர்ல.
என் ப்ரெண்டு வீடும் தில்லை நகர்ல தாங்க இருக்கு.
நீங்க திருச்சிக்கு வந்தாலும் எங்க வீட்டுக்கு வர முடியாது.ஏன்னா இப்ப இறங்கிறப்பக்கூட போய்ட்டுவர்ரேன்னு சொல்லிட்டுப் போகமுடியாதுங்க.என்னக் கூட்டிட்டுப் போறதுக்கு எங்க வீட்டுக்காரர் வந்திருப்பாரு.பாத்தா சந்தேகப்படுவார்.தப்பா நினைச்சுக்காதீங்க.
ரயில் திருச்சி சந்திப்பில் நின்றது. சூட்கேஸை எடுத்துக்கொண்டு தன்னை அழைத்துச் செல்வதற்காக வந்த கணவனை நோக்கி நடந்தாள்.
